புதன், 31 மார்ச், 2021

புதிய முறையில் யாழில் கொள்ளை அடிக்கும் கும்பல் !மக்களே அவதானம்

அண்மையில் யாழில் ஒரு மரண வீடு இடம்பெற்றது. அதற்கான மரண அறிவித்தல் செய்தி ஒரு பிரபல பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது அத்துடன் வழமை போல மரண வீட்டு தொலைபேசி இலக்கமும் 
வழங்கப்பட்டிருந்தது.
சம்பவ தினம் காலையில் அந்த வீட்டு தொலைபேசிக்கு ஒரு இனம் தெரியா இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது. பத்திரிகையில் உறவினர்கள் பெயர் விபரங்கள் குறிப்பிட்டிருந்ததை சாதகமாக பயன்படுத்தி நீங்கள் இன்னார் தானே இவர் உங்கள் உறவினர் தானே என்று நன்கு தெரிந்தவர் போல காட்டிக் கொண்டார் எதிர்த் தரப்பில் பேசியவர்.
அத்துடன் அந்த வீட்டில் இருந்த ஒரு ஆசிரியரிடம் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அந்த ஆசிரியரிடம் நீங்கள் இந்த பாடசாலையில் தானே கற்பிக்கின்றீர்கள் என்று நன்றாக தெரிந்தவர்கள் போல காட்டி தாம் வறிய பிள்ளைகளுக்கு உதவி செய்பவர்களாக சொல்லி உங்கள் பாடசாலையில் கற்கும் வசதி குறைந்த மாணவர்களின் இலக்கங்களை வழங்குமாறு
 கேட்டுக் கொண்டார்கள்.
அந்த ஆசிரியரும் தான் இப்பொழுது ஓய்வு பெற்று விட்டதால் பாடசாலை உப அதிபருடன் கதைத்து இப்படி அழைப்பெடுத்திருக்கிறார்கள் உங்கள் இலக்கத்தை குடுக்கிறேன் என்று சொல்லி இலக்கத்தை அந்த நபரிடமும் குடுத்திருக்கிறார்.
அந்த நபர் உப அதிபருடன் கதைத்து வறிய மாணவர்களின் குடும்ப விவரம் மற்றும் தொலைபேசி இலக்கங்களை பெற்று
 இருக்கின்றார்கள்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>




நாட்டில் திடீர் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதித்த தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள்

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை
 முன்னெடுத்துள்ளன.
ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதாக ஒன்றியத்தின் தலைவர் சிந்தக பண்டாரா 
தெரிவித்தார்.இதற்கிடையில், அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் தபால் துறை உடனடியாக இரத்து செய்துள்ளது.விடுமுறை இரத்து செய்யப்பட்ட போதிலும் போராட்டம் தொடரும் என கூட்டு அஞ்சல் தொழிற்சங்கம் (ஜே.பி.டி.யு) தெரிவித்துள்ளது.
இதேவேளை, 
போராட்டம் காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனையிலிருந்து தபால்களை அனுப்புதல் மற்றும் பெறும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், அரசாங்கம் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், சாதாரண தொழிற்சங்க நடவடிக்கை பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுக்கும் என சிந்தக பண்டாரா 
தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 27 மார்ச், 2021

புகழேந்தி நகர்ப்பகுதியில் வாள் வெட்டு குழுவொன்று தாக்குதல்

முல்லைத்தீவு மல்லாவி புகழேந்தி நகர்ப்பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ளவர்களை 26-03-2021.அன்றிரவு வாள் வெட்டுக் குழுவொன்று 
தாக்கியுள்ளது.
இம்மாதம் 13ஆம் திகதியும் குறித்த வால்வெட்டுக் குழு இந்த வீட்டில் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் மீண்டும் மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இம்மாதம் 13ஆம் திகதி, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரால் இந்த  வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில்,  நேற்றிரவும் குறித்த வீட்டுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழுவினர் வீட்டின் கதவுகளை உடைத்து  சேதப்படுத்தியுள்ளதோடு, வீட்டில் இருந்த இருவர் மீதும் தாக்குதல்
 நடத்தியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நவற்கிரி நிலாவரையில் தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சி

யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நவற்கிரி  நிலாவரை புத்தூர் பகுதியில் தொல்பொருள்  திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
 கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில்,27-02-2021. ; இன்றைய தினம் மீண்டும் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  
 இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியுள்ளதை அவதானிக்க முடிந்துள்மையும் அங்கு குழப்பமான நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 26 மார்ச், 2021

முடக்கப்பட்டது யாழ். மாநகரம்.கட்டுப்பாட்டை கையில் எடுத்தது இராணுவம்.

யாழ்ப்பாணம் மாநகரின், பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி வரையான காங்கேசன்துறை வீதியின் இரு மருங்கு கடைகளும், வைத்தியசாலை வீதியில் சிவன் பண்ணை சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதி வரையான 
இரு மருங்கு கடைகளும், முனீஸ்வரன் வீதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும்,கஸ்தூரியார் வீதி, பழைய தபாலக 
வீதிகளிலுள்ள இரு மருங்கு கடைகளும், மின்சார 
நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பேருந்து நிலையமும், புதிய பேருந்து நிலையம் மற்றும் பண்ணை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலையில் பேருந்து நிலையம் வழக்கம் போல இயங்கியது.  
வர்த்தக நிலையங்கள் சிலவும் திறந்தன. 
அந்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் வழக்கம் போல இருந்தது.இதையடுத்து, இராணுவம் களமிறக்கப்பட்டு அந்த பகுதியில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.இதேவேளை, ஏற்கனவே புதிய பேருந்து நிலைய சர்ச்சை நிலவி வரும் நிலையில், இ.போ.சவினர் இதுவரை புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லவில்லை.

நிலாவரை.கொம் செய்திகள் >>>









பலகோடி ரூபா பணம் யாழ்.இளைஞனின் வங்கிக் கணக்கில் மாட்டியது

யாழ்.இளைஞனின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் வைப்பிலிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் குறித்த இளைஞன் வவுனியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண 
தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்குகளை ஹக் செய்து சுமார் 17.20 மில்லியன் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டிலேயே.25-03-2021.அன்று . இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்காவிலிருந்து ஒரு தனியார் வங்கியில் அவரது கணக்கில் 17.2 மில்லியன் ரூபாய் வைப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக 2020 ஏப்ரலில் ரூ. 140 மில்லியன் இலங்கையில் பல வங்கிக் கணக்குகளில் வைப்பிடப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் வசிக்கும் பல்வேறு நபர்களின் கணக்குகளை 
ஹேக் செய்வதன் 
மூலம் பணம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.மேலும், இந்த விசாரணைகள் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு மற்றும் குற்றவியல் புலனாய்வுத் துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கபட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 24 மார்ச், 2021

ஸ்ரீலங்கா மீண்டும் உலகின் கண்காணிப்பு வலயத்தில்

சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன். 

இலங்கையை கண்காணித்து, இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர்/அக்டோபரிலும், எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி/மார்ச்சிலும் சமர்பிக்கும்படியும், அதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர்/அக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும், ஐநா மனித உரிமை ஆணைக்குழு (UNHRC) தீர்மானம், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தை (OHCHR) கோரியுள்ளது என்பதை இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி  மனோ எம்பி மேலும் கூறியதாவது,   

அரசாங்கம் இன்று கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டுகிறது. தமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையும், வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத நாடுகளையும் கூட்டிக்காட்டி ஐநா தீர்மானம் தோற்றுவிட்டது என கூறுகிறது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம். அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சம். ஆகவே, "வாக்களிக்காதவர்களும் நம்மவரே" என்ற அரசாங்கத்தின் கணக்கின்படி, கோட்டாபய ராஜபக்ச உண்மையில் தோல்விதான் அடைந்துள்ளார். ஆகவே அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ? என்ற கேள்வியை வெளிவிவகார அமைச்சர், எனது கொழும்பு மாவட்ட நண்பர் தினேஷ் குணவர்தனவிடம் கேட்க விரும்புகிறேன். 

இலங்கை அரசாங்கம் கனவு கண்டுக்கொண்டு, ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் வேளையில், ஐநா செயற்பட போகிறது.  அதற்கான பலமும், அதிகாரமும் இந்த தீர்மானம் மூலம் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR) கிடைக்கிறது. ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் (UNHRC) அங்கம் வகிக்கும், வகிக்காத சுமார் 40 இணை அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்ட இலங்கை பற்றிய இந்த தீர்மானம், இலங்கையை கண்காணிக்கும் பொறுப்பை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு (OHCHR)  வழங்குகிறது. 

முதற்கட்டமாக பன்னிரெண்டு (12) விசேட ஊழியர்கள், இலங்கை கண்காணிப்பு தொடர்பில், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க சுமார் 29 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அலுவலகம் ஐநா பொதுசபையை கோரியுள்ளது. 

இதன்மூலம், சாட்சியம், தகவல்  ஆகியவற்றை சேகரிக்கும், கண்காணிக்கும் நடவடிக்கைகளை, அலுவலகம் ஆரம்பிக்கும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியுடன் பொறுப்பு கூறல், நீதி விசாரணை, மனித உரிமை மீறல், சர்வதேச மனித உரிமங்கள் மீறப்படல் ஆகியவை தொடர்பில் கண்காணிப்பு முன்னெடுக்கப்படும்.    

எனவே பொறுப்பு கூறல், நீதி விசாரணை, தண்டனை, நஷ்டஈடு, காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாக செயற்படல்,  அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல், பன்மைத்துவம் ஏற்பு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அரசாங்கம் இனியும் சர்வதேசத்துடன் பேட்டை ரவுடியை போன்று முரண்பட முடியாது. அத்தகைய பிற்போக்கு அரசியல் விளையாட்டுக்கு இனி கால அவகாசமும் இல்லை. அதற்கு இது உள்நாட்டு மைதானமும் இல்லை.    

நிலாவரை.கொம் செய்திகள் >>>



பொருளாதார தடை சிறீலங்காவுக்கு விதிக்கக்கூடிய நிலைமை இல்லை

மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலைமை இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும்,வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல 23-03-2021.அன்று தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு 24-03-2021. இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் 
இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக செயற்படும் ருவன் சத்குமாரம்
 கலந்துகொண்டார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?
என கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது.
மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் தனிப்பட்ட ரீதியில் பேரவையினால் சில நாடுகளுக்கு இதனை 
வலியுறுத்த முடியும்.
ஆனால் இவ்வாறான தடை விதிக்கப்பட வேண்டுமாயின், ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிலேயே இதுதொடர்பில் தீர்மானங்கள் 
மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு சபையில் வீடோ அதிகாரத்தை கொண்ட பால நாடுகள் உண்டு.அவை எமக்கு ஆதரவு வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை.
யுத்தம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொடர்பாக இலங்கை பிரிட்டிஷ் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு அதன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைத்த 
தகவல்கள் முரண்பாட்டை கொண்டதாக பிரபு நேஸ்பி தெளிவுபடுத்தியுள்ளார்.
6 மாத கால தகவல்களை இவர் ஆய்வு செய்து அதில் 
முரண்பாடு இருப்பதை வெளிப்படுத்தி இருந்தார். அமெரிக்க பிரதிநிதி ஒருவரும் இந்த அறிக்கை பக்கசார்பானது என்று அப்பொழுது 
குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி கேனல் ஸ்மீத்தும் இந்த முரண்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக அக்கால பகுதியில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய அமெரிக்காவும் அதிலிருந்து 
விலகிக் கொண்டது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்து சரியானவற்றை இலங்கை முன்வைப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 23 மார்ச், 2021

இலங்கை மத்திய வங்கி சீன மக்கள் வங்கியுடன் நாணயப் பரஸ்பர பரிமாற்றல்

¨

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் இரு நாடுகளினதும் இருபுடை வர்த்தகத்தினையும் பொருளாதார அபிவிருத்திக்கான நேரடி முதலீடுகளையும் மேம்படுத்தும் நோக்குடனும் இரு தரப்பினரும் இணங்கிக்கொள்ளும் ஏனைய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காகவும் இருபுடை நாணயப் பரஸ்பரபரிமாற்றல் உடன்படிக்கையொன்றினைச் செய்துகொண்டன.
சீன மக்கள் குடியரசு இலங்கையின் மிகப்பெரிய இறக்குமதி மூலமாக தொடர்ந்தும் இருந்துவருகின்றது. 2020 இல் சீனாவிலிருந்தான இறக்குமதிகள் ஐ.அ.டொலர் 3.6 பில்லியனாக விளங்கின. (இலங்கையின் 
இறக்குமதிகளில் 22.3 சதவீதம்).
இப்பரஸ்பர பரிமாற்றல் உடன்படிக்கைக்கு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் விதந்துரைப்புடன் அமைச்சரவை ஒப்புதலளித்திருக்கின்றது. இரு மத்திய வங்கிகளினதும் ஆளுநர்களான, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி லக்ஷ்மன் மற்றும் சீன மக்கள் வங்கியின் 
ஆளுநர் முனைவர். 
ஜி காங் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கின்றனர்.
இவ்வுடன்படிககையின் கீழ், இலங்கை மத்திய வங்கி சீன யுவான் 10 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) தொகை கொண்ட பரஸ்பர பரிமாற்றல் வசதியைப் பெற தகைமை பெறுகின்றது. இவ்வுடன்படிக்கையானது மூன்று (3) ஆண்டு காலப்பகுதிக்குச் செல்லுபடியாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 22 மார்ச், 2021

கிளிநொச்சியிலும்முன்னெடுக்கப்பட்டது.ஆறுகளை காத்திடுவோம்

சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ஆறுகளை காத்திடுவோம். தேசிய வேலைத்திட்டம் .22-03-2021.இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரு்ம,நாடாளுடன்ற குழுக்களின் பிரதி 
தலைவருமான அங்கயன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், கிளிநொச்சி, வவுனியா,முல்லைத்தீவு,
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள்,பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதன்போது இன்றைய நாளின் நினைவாக ஆற்று பகுதியில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கதாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் இராணுவ சிப்பாயை தாக்கிய இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

நாட்டில் விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் ஒருவரை தாக்கிய பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் மற்றும் உணவகம் ஒன்றை அச்சுறுத்திய பியகம பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறை  ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை  மாஅதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

இலங்கைத் தமிழர் விவகாரமும் மற்றும் தமிழீழ விடயங்கள் தமிழகத் தேர்தலில்

தமிழக தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் விவகாரமும் மற்றும் தமிழீழம் தொடர்பான விடயங்களே பிரசாரப் பொருளாக இருப்பதாகவும், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ளாது என்றும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
அதன்போது அவர் மேலும் 
தெரிவிக்கையில்,
தென்னிந்திய தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர்களின் விவகாரமே பிரதான பிரசாரப் பொருளாக இருக்கின்றது. தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் 
மறைக்கப்பட்டு விடும்.
ஈழம் தொடர்பில் இந்திய அரசியல் கட்சியொன்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் கருத்து தொடர்பாக அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ளாது. ஏனென்றால் தேர்தல் முடிந்த பின்னர் அவை அனைத்தும் மறக்கப்பட்டுவிடும். காலாகாலமாக இப்படித்தான் நடக்கின்றது.
பெரும் போராட்டத்தின் பின்னரே இலங்கையில் 30 வருட யுத்தம் முடிவுக்கு வந்தது. தற்போது தேசியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனியொருபோதும் பிரிவினை வாதத்துக்கு இடமளிக்கப்படாது. அதற்கு எந்த வழியிலும் இடமளிக்கப்படாது.
இதேவேளை வடக்கு, கிழக்கில் சில அரசியல்வாதிகள் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர். அந்நாட்டு அரசியல் தலைவர் இரகசியமான முறையில் இங்கு வந்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பின்னரே எமக்குத் தெரிய
 வருகின்றது.
எவ்வாறாயினும் பிரிவினைக்கு இடமளிக்க முடியாது. அத்துடன் எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையைப் பலப்படுத்தி முன் நகர்வதே எமது செயற்பாடா குமென்றும் அவர் 
தெரிவித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




குறுகிய காலத்தில் கிளிநொச்சியில் பல கொலைச்சம்பவங்கள்

கிளிநொச்சியில் குறுகிய காலத்தில் பல கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறித்தும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கும் விடயத்தில் காவல் துறை  செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடமாகாண பிரதி  காவல் துறை மா அதிபருக்கு
 கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள  கொலைச் சம்பவங்கள்
மீள்குடியேற்றத்தின் பின்னரான பத்துவருட காலப்பகுதியில் தங்கள் நிருவாக எல்லைக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதும், அக் கொடூர 
கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இனங்காணப்படாமலும், இனங்காணப்பட்டு குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு
 உரிய தண்டனைகள் வழங்கப்படாமலும் உள்ளமை இறந்தவர்களின் குடும்பங்களிடையே உளரீதியான தாக்கத்தையும், மக்களிடையே காவல் துறை  மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
1. இல.935, சிவிக்சென்ரர், வட்டக்கச்சியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான திரு.அருளம்பலம் துசியந்தன் (வயது.34) அவர்கள் கடந்த 2021.03.10 ஆம் திகதி மாலை அவரது வீட்டில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களின் கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 2021.03.11ஆம் திகதி மரணமடைந்துள்ளார். இவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள போதும் அக் கொலையாளிகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் காவல் துறை  ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நேற்றைய தினம் 2021.03.15 ஆம் திகதி கொலையாளிகளின் வீட்டிற்குப் பொலிசார் சென்றதை அவதானித்து அங்கு சென்றிருந்த ஊரவர்களும், இறந்தவரின் மனைவியான திருமதி.தீபா துசியந்தன் (வயது.34), இறந்தவரின் சகோதரியான திருமதி.வசிதினி தீபன் (வயது.33), அவர்களது அயலவரான செல்வி.பிரவீனா தங்கேஸ்வரன் (வயது.20), இறந்தவரின் மைத்துனரான திரு.குகதாசன் ஜனகன் (வயது.40) ஆகியோர் தருமபுரம் பொலிசாரால், துப்பாக்கிகளாலும், குண்டாந்தடிகளாலும் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் காணொலி வடிவில் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்ததை தாங்களும் 
அறிந்திருப்பீர்கள்.
ஏற்கனவே ஒரு உயிரை அநியாயமாகப் பலிகொடுத்துவிட்டு ஆற்றாமையின் விளிம்பில் நிற்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அதிலும் குறிப்பாக பெண்களை அவர்கள் கண்ணீரோடு கதறியழுததையும் பொருட்படுத்தாது கடுமையாக தாக்கிய காவல் துறையின் ஈவிரக்கமற்ற
 இச்செயல் அப்பகுதி மக்களிடையே பாரிய அச்ச நிலையையும், காவல் துறை  மீதான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் தருமபுரம் காவல் துறை  மேற்கொள்ளப்பட்ட இவ் அராஜகச் சம்பவம், இந்த மண்ணில் கடந்த எழுபது ஆண்டுகளாகப் 
புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு 
ஆரம்பத்தில் அடித்தளமிட்ட பொலிசாரின் இனவெறிச் செயற்பாடுகளை எமக்கும், பாதிக்கப்பட்ட எம்மின மக்களுக்கும் நினைவுபடுத்தும் வகையிலான மோசமான செயற்பாடகாவே அநை;திருந்தது என்பதை தங்களுக்கு மனவருத்தத்துடன் சுட்டிக்காட்ட 
விரும்புகிறேன்.
2. கடந்த 2021.03.09 ஆம் திகதி கிளிநொச்சி, அம்பாள் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 37 வயதான திருமதி.திலகேஸ்வரி காமராஜ் அவர்கள் கொலைசெய்யப்பட்டே மரணமடைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அக் கொலையாளியோ, சம்பவத்துடன்
 தொடர்புடையவர்களோ இதுவரை காவல் துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை.
3. 10 வீட்டுத் திட்டம், மாயவனூர், வட்டக்கச்சியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருமதி.நிறோசா பாஸ்கரன் 
(வயது.24) அவர்கள் கடந்த 2018.02.14 ஆம் திகதி குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவரான திரு.யோகராஜா பாஸ்கரன் என்பவரால் கொலைசெய்யப்பட்டு இற்றைக்கு மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட கொலையாளிக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை. இக் கொலையாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே திரு.அருளம்பலம் துசியந்தன் அவர்களின் கொலையுடன் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. வட்டக்கச்சிப் பகுதியில் 2012 ஆம் நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றவாளிக்கும் இதுவரை தண்டனை வழங்கப்படாத நிலையில் மிகக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட அவர்களும் தற்போது சமூகத்தில் சாதாரண மனிதர்கள் போன்று நடமாடுவதை 
அவதானிக்க முடிகிறது.
5. இல.06, 30 வீட்டுத் திட்டம், உதயநகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான திரு.நாகராசா திருக்குமார் அவர்கள் கடந்த 2017.05.16 ஆம் திகதியன்று அவரது வீட்டில் வைத்து வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். குறித்த சம்பவத்தில் அவரது மனைவியான திருமதி.கிருஸ்ணவேணி திருக்குமார் அவர்களும் பலத்த காயமடைந்திருந்த போதும் இதுவரை அக்கொலைக்குரிய நீதியோ, கொலையாளிக்குரிய தண்டனையோ 
வழங்கப் படவில்லை.
6. கடந்த 2019.07.30 ஆம் திகதி ஜெயந்திநகர்ப் பகுதியில் 74 வயதான தாயும், 34 வயதான மகனும் அவர்களது அயல் வீட்டுக்காரரால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டு கொலையாளி கைதுசெய்யப்பட்ட போதும் இன்றளவும் அவ் இரட்டைக் கொலையைப் புரிந்தவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
7. சங்கத்தார் வயல், இயக்கச்சி, பளையைச் சேர்ந்த திரு.தங்கராஜா தர்மலிங்கம் (வயது.57) அவர்கள் கடந்த 2019.10.29 ஆம் திகதியன்று குறித்த பகுதியில் அடித்தும், வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்த போதும் அக்கொலைக் குற்றவாளிகளுக்கான தண்டனை 
வழங்கப்படவில்லை.
இவைதவிர குறுகிய கால இடைவெளியில் மிக அதிகமான கொலைச் சம்பவங்கள் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ள போதும் அக்குற்றவாளிகளுக்கான தண்டனை வழங்குவதிலும், தமது உறவுகளின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
 நீதியைப் பெற்றுக் கொடுப்பதிலும் பொலிசாரின்
 கரிசனை போதுமானதாக இல்லை என்பதே மக்களின் பொதுவான அபிப்பிராயமாக உள்ளது.
அதேவேளை இக் குற்றங்களுக்கான தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்படாமை குற்றவாளிகளை துணிகரமாக மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கப்பதாகவே அமைந்துள்ளது. 
எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள 
கொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக உடனடி நடவடிக்கை களை மேற்கொள்ளவும், ஈடுசெய்ய முடியாத உயிரிழப்புக்களால் பாதிப்படைந்துள்ள கொலையுண்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நீதியைப் பெற்றுக்;கொடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு தங்களைத் தயவுடன்
 கேட்டுக் கொள்கிறேன்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 17 மார்ச், 2021

பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்க நேரிடலாம்..இராணுவத் தளபதி


எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவை ஏற்பட்டால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
கடந்த நத்தார் காலப்பகுதியின் பின்னர் நாட்டில் கொரோனா பரவல் நிலைமை அதிகரித்துள்ளது. அவ்வாறான காலப்பகுதியில் 
மக்கள் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுவதில்லை என உறுதியாகியுள்ளதென இராணுவத் தளபதி
 குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராணுவத் தளபதி இதனைக் கூறியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பில் தமிழகத்தின் ஆளும் கட்சியின் முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.தமிழகத்தில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இம்முறை 
தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை
 இலக்காகக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட 
முன்னேற்றக் கழகம் வௌியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாகவும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட ஏழு 
பேரை விடுதலை
 செய்ய உத்தரவிட வேண்டுமென தாம் தொடர்ந்தும் உணர்வுபூர்வமாக வலியுறுத்துவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.இலங்கையில் நடந்த இனப்படுகொலை, வன்புணர்வு போன்ற கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்ட 
தமிழ் மக்களுக்கு
 உரிய நீதி கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தமிழ் ஈழம் அமைந்திட அழுத்தம் கொடுப்பதாகவும் அந்த கட்சியின் ​தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது புதிய 
சர்வதேச நடுநிலை
 சுதந்திரத் தீர்ப்பாயம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கும் மத்திய அரசுக்கும் அ.தி.மு.க தொடர்ந்து 
அழுத்தம் கொடுக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.இலங்கையில் 
அரசியல் கட்சியாக செயற்படுவது தொடர்பில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு உள்ள 
திட்டம் தொடர்பில் திரிபுரா மாநில முதலமைச்சர் 
கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், பாரதிய ஜனதாக் கட்சி அங்கம் 
வகிக்கும் அதிமுக 
கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இலங்கை தொடர்பான 
விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இலங்கை அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு அமைய, இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என
 குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 16 மார்ச், 2021

கொழும்பு நகரில் நள்ளிரவு வீதியில் சுற்றித் திரிந்த இளம் யுவதிகள் கைது

கொழும்பு நகரில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த நான்கு யுவதிகளை கைது செய்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் 
ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்ட குறித்த யுவதிகளை தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் 
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே 
அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.கொழும்பு கோட்டைப் பொலிஸார் இந்த யுவதிகளை கைது செய்து வழக்குப் பதிவு செய்திருந்தனர்.இதேவேளை அபராதம் செலுத்திய பின்னர், கைது செய்யப்பட்ட யுவதிகள் விடுதலை 
செய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 14 மார்ச், 2021

நாட்டில் தனிநபர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்ற முடியாது

 தனிநபர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண 
தெரிவித்துள்ளார்.
மகரஹமவில் இதனை தெரிவித்துள்ள அவர் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டத்தில் மாற்றங்களை செய்யவேண்டுமென்றால் நிபுணர்கள் குழு அதனை ஆராய்ந்த பின்னரே மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அவர்
 குறிப்பிட்டு;ள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கான அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் குரோத அரசியலிற்கான விதைகளை தூவி சட்டத்தை மீறி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் எவரையும் கைதுசெய்ய தயங்கமாட்டோம் எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
தங்கள் பதவிகளிற்கு அப்பால் இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் நாட்டின் சட்டங்களை மதிக்கவேண்டும்,தனிநபர் ஒருவரின் விருப்பங்களிற்காக சட்டங்களை மாற்றமுடியாது என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

நெத்தலியாறு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான மண் அகழ்வினால் 500அடி ஆழமாது

 கிளிநொச்சி-நெத்தலியாறு ஆற்றுப்பகுதியில் பல வருடங்களாக  சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை 
வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆறு, 66 அடி ஆழமாக இருந்துள்ளது.எனினும் தற்போது சட்டவிரோதமான மண் அகழ்வினால் 500அடி ஆழமாக சென்றுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்த ஆற்றுப்பகுதியில் பெரும்பாலான மரங்கள் அழிக்கப்பட்டு வருவதுடன், தமது ழூதாதையர் காலம் முதல் குறித்த ஆறு இருந்து வருகிறது எனவும் அப்பிரதேச மக்கள் 
குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே நெத்தலியாறு ஆற்றுப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக தடுத்து  நிறுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

புதன், 10 மார்ச், 2021

கற்பிட்டி சோமைத்தீவு பகுதியில் புதருக்குள் கஞ்சா கைப்பற்றிய கடற்படை

கற்பிட்டி சோமைத்தீவு பகுதியில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிலோ 125 கிராம் கேரளா கஞ்சா கற்பிட்டி விஜய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மாலை குறித்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.இதன்போது 
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.அத்தோடு கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக 
கற்பிட்டிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர்
 தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிரித்தானியா.கையை விரித்தது.இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்

ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாதென பிரித்தானியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் போதுமான ஆதரவு இல்லாமையால் இந்த
 நிலை ஏற்பட்டதாக பிரித்தானியா வெளியிட்டுள்ள 
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி 13,500 இற்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் அனுப்பட்ட கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக 
பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே
 குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யை நிறுவிய ரோம் சட்டத்தில் ஸ்ரீலங்கா கையொப்பமிடவில்லை என்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவினால் மாத்திரமே ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியும் என்பதுடன் அத்தகைய பரிந்துரையை வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளே செய்யலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் இடைக்கால நீதிக்கு அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினாலும், பிரித்தானியா 
தொடர்ந்தும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது 
நம்பிக்கை கொண்டுள்ளதாக 
அறிவித்துள்ளது.அதன் பிரகாரம் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான
 அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வழக்குத் தாக்கல் செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பிரித்தானியா தொடர்ந்தும் அழைப்பு விடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 9 மார்ச், 2021

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மேற்கொள்வதற்கு ராஜபக்ஷக்கள் வழிநடத்தினர்


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன், இருவருக்கும் தொடர்பிருப்பதாக, ஒருவரிடம் சாட்சியம் இருக்குமாயின், அவ்விருவரையும் கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, அவ்விருவருக்கு எதிராகவும் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ள புதிய சிங்கள ராவய அமைப்பு, கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுவதிலும் ஆணைக்குழுக்களை அமைப்பதிலும் அர்த்தமில்லை என்று
 கூறியுள்ளது.
  கொழும்பில் நேற்று (8) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவ்வமைப்பின் உறுப்பினர் மாகல்கந்தே சுதத் தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் 
கூறுகையில்,
'இந்தத் தாக்குதலை மேற்கொள்வதற்கு, கோட்டாபய  ராஜபக்ஷவும் பஷில் ராஜபக்ஷவும் வழிநடத்தினர் என்றும், நிசங்க சேனாதிபதி நிதியுதவி வழங்கினார் என்றும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக அபேசிங்க, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அவ்வாறாயின், அவ்விருவரையும் கைது செய்து, சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும்' எனக் கோரிநின்றார்.
'அசோக அபேசிங்கவிடம் உரிய சாட்சிகள் இல்லையெனில், அவரும் நாளை கைது செய்யப்படவேண்டுமெனத் தெரிவித்த அவர், தாக்குதல்களில் 250க்கு மேற்பட்ட கத்தோலிக்கர்கள்  உயிரிழந்துள்ளனர். ஆகையால், சடலங்களின் மீது அரசியல் செய்ய வேண்டாம். சடலங்களை விற்று உண்ணவும் வேண்டாமென அசோக அபேசிங்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்' 
என்றார்.
கறுப்பு கொடியைப் பறக்கவிடுவதிலும் இதனை விசாரிப்பதிலும் ஆணைக்குழு அமைப்பதிலும் அர்த்தமில்லை. அசோக அபேசிங்கவிடம் சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும். அவருடைய சாட்சியம் உறுதிப்படுத்தப்படாவிடின், அசோக அபேசிங்கவுக்கு 
எதிராகச் சட்டநடவடிக்கை எடுப்பது 
அவசியமாகும். இதுதொடர்பிலான அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பொன்றை விடுக்காவிடின் காவல் துறை  தலைமையகத்துக்கு இன்று (09) காலை சென்று, முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு முறைப்பாடு செய்வோம் என்று 
மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

ஞாயிறு, 7 மார்ச், 2021

மர்மமான பதுங்குகுழி..இலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிப்பு

கண்டி தெல்தெனிய பொலிஸ் பிரிவின், திகன, அம்பகோட்டை பிரதேசத்தில் மர்மமாக நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் 
அறைக்குள் 20 அடி ஆழமான மர்ம குழி ஒன்று தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளார். தெல்தெனிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தொல்பொருள் பிரிவு அதிகாரிகள் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.
திகன பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இந்த வீட்டை வாடகைக்கு பெற்றிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய, தெல்தெனிய விசேட பொலிஸ் 
குழுக்கள் குறித்த வீட்டிற்கு சென்றுள்ள விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இவ்வளவு ஆழமான குழி எதற்காக தோண்டப்பட்டுள்ளதென பொலிஸார் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதையல் அல்லது தொல்பொருள் பெறுமதியாக 
சொத்துக்கள் தேடும் நோக்கில் வீட்டினுள் ஆழமாக குழி தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதற்கமைய உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு பெற்றவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.

 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 5 மார்ச், 2021

கறுப்பு ஞாயிறாக பிரகடனம் : மார்ச் 07ஆம் திகதி கறுப்பு உடையணிந்து எதிர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவுற்ற நிலையிலும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தவறியுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்தவும் அன்றைய தினத்தில் அதற்கான எதிர்ப்பை தெரிவிக்கவும் கொழும்பு உயர் மறைமாவட்டம் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் நாடளாவிய அனைத்து ஆலயங்களிலும் ஞாயிறு திருப்பலியில் கலந்து கொள்ளும் மக்கள் கறுப்பு உடை அணிந்து திருப்பலியில் பங்கேற்குமாறும் திருப்பலியின் நிறைவில் ஆலயத்திலிருந்து வெளியில் வந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதிகோரி மௌன எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளுமாறும் உயர்மறை மாவட்டம் ,04-03-2021, அன்று 
 அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பதாக அதன் முக்கிய குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு அரசாங்கம் தவறுமானால் நாடளாவிய பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளப்போவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேற்படி தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள், அவர்களுக்கு அனுசரணை வழங்கியவர்கள், நிதி பங்களிப்பு செய்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.அந்த நடவடிக்கைகள் மேலும் தாமதப்படுத்தக் கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>





Blogger இயக்குவது.