யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி" வீதியினை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி
பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதான கட்டளை, எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என மல்லாகம் நீதவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் (மே 21) இவ்வழக்கு மீதான கட்டளை வழங்கப்படும் என கடந்த 11ஆம் திகதி மன்று திகதியிட்டிருந்த நிலையில், இன்றைய அமர்வின் போது இக்கட்டளை அடுத்த மாதம் ஜூன் 25 ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டது.
இவ்விவகாரத்தின் பின்னணி விபரங்கள் வருமாறு: வீதி அளவீடும் விகாராதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதமும் தையிட்டி விகாரை வளாகத்திற்குள் அமைந்துள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் பிரதேச சபையே வேலியை அகற்றி அதற்கான செலவீனத்தை
விகாராதிபதியிடமிருந்து அறவிடும் எனவும் தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
பொலிஸாரின் அச்சுறுத்தலும் நீதிமன்ற மனுவும் பிரதேச சபை விகாரை வேலியை அகற்ற முற்படுவதாக விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இம்முறைப்பாட்டின் பிரகாரம் தவிசாளரை அழைத்த பொலிஸார், "வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் நல்லிணக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் இப்பணியைக் கைவிட வேண்டும்" என அச்சுறுத்தும் தொனியில் கூறினர்.
எனினும், பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தவிசாளர் பொலிஸாரிடம் மறுத்துரைத்தார். இதனையடுத்து, வீதியை மீட்கும் பணியை வலி. வடக்கு பிரதேச சபை கைவிட வேண்டும் எனத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
சுமந்திரனின் வாதமும் தள்ளிவைக்கப்பட்ட கட்டளையும் இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், ஒருதலைப்பட்சமாக உத்தரவிட முடியாது எனக் கூறி வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு
விடுத்திருந்தது.
அதன்படி கடந்த 11ஆம் திகதி அவர்கள் மன்றில் முன்னிலையான போது, அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகிப் பிரதேச சபை தரப்பு வாதங்களை
முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த தீர்ப்புக் கட்டளையே, தற்போது ஜூன் 25ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html














