சனி, 12 செப்டம்பர், 2026

நாட்டில் சாவகச்சேரியில் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

நாட்டில் புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டியும், 
அந்த வாக்குறுதிகளை 
நிறைவேற்றக் கோரியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளைப் பெற்ற நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, வலி. வடக்கில் தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள்
 சுட்டிக்காட்டினர்.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 600 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ள போதிலும், அதனைப் பயன்படுத்துவதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், தேர்தல் காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளித்த அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், தமிழ் மக்களின் பகுதிகளில் தொல்லியல் திணைக்களம் தொடர்பான நடவடிக்கைகள் மூலம் திட்டமிட்டு பல்வேறு விடயங்கள் திணிக்கப்படுவதாகவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் 
தெரிவித்தனர்.
இவ்வாறான விடயங்களை கண்டித்தும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.