வியாழன், 23 செப்டம்பர், 2021

முல்லையடி பகுதியில் சிறுவன் மீது நடந்த கடுமையான தாக்குதலில் பலத்த காயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில்  22-09-2021.அன்றயதினம் 14 வயது சிறுவனொருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் அப்பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வந்த நபரொருவரே சிறுவனை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நபரொருவர் அண்மைக்காலமாக பளையில் வசித்து வரும் நிலையில் அவர் கிராமத்தில் உள்ள அநேகமானவர்களுடன் வீண் தகராறுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த நபர் மீது பளை பொலிஸ் நிலையத்தில் அதிகளவில் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை குறித்த சிறுவனின் தாயாரை அந்த நபர் தகாத வார்த்கைளால் பேசிய நிலையில் மகன் ஆத்திரமடைந்து நியாயம் கேட்பதற்காக சென்ற போது கடுமையாக தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் சிறுவன் கழுத்தில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.