புதன், 27 அக்டோபர், 2021

நாட்டில் லொத்தர் சீட்டில் வென்ற பணத்தை பாடசாலைகளின் அபிவிருத்திக்காக அன்பளிப்பு செய்த நபர்

துபாய் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பேருவளை – மரக்கல வத்தை பிரதேசத்தை சேர்ந்த மிஷ்பான் மொஹமட் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார்.
துபாய் நாட்டில் தொழில் செய்து கொண்டிருந்த போது கொள்வனவு செய்த லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பணத்தை அவர், தான் கல்வி கற்ற பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 இஸ்லாமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக பகிர்ந்தளித்துள்ளார்.
இது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களை அவர், பேருவளை பாடசாலைகள் அபிவிருத்திக்குழு சங்க நிர்வாகிகளிடம் கையளித்துள்ளார்.
இந்த நிதி அன்பளிப்பின் போது அரசியலுடன் சம்பந்தப்பட்ட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது 
குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 24 அக்டோபர், 2021

நாட்டில் தீபாவளி தினத்தை கொண்டாத்தை துக்க தினமாக கொண்டாட வேண்டிய சூழ்நிலை

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (V.Rathakirushnan) தெரிவித்தார்.
எனவே,விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம். அதுவரை ஓயமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக இராகலை நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு
 தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்ட ஒரு அரசாங்கம் என்றால் 
அது இந்த அரசாங்கமே.
இன்று எதை கேட்டாலும் விலையேற்றம், தட்டுப்பாடு என்ற வார்த்தைகளே வெளிவருகின்றது.
இந்த தீபாவளி தமிழர்களுக்கு ஒரு கறுப்பு தீபாவளியைாக அமைய போகின்றது. பொருட்களின் விலையேற்றம்,வேலைக்கான உரிய சம்பளமின்மை,தொடர்ச்சியான மக்களின் போராட்டம் போன்ற காரணங்களால் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசேடமாக கொண்டாடும் தீபாவளி தினத்தை துக்க தினமாக கொண்டாட வேண்டிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது என்று
 எங்களை பார்த்து கை நீட்டியவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.
வாய் மூடி மௌனிகளாக அரசாங்கத்தை
 வக்காளத்து வாங்கி கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க முடியாமல்
 இருக்கின்றார்கள்.
இப்படியான ஒரு நிலையில் நல்லாட்சியை குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் கணிசமான சம்பள உயர்வை வழங்கியதோடு,எந்த காரணத்திற்காகவும் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கபடவில்லை.
எனவே, மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் தொடரும் என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 23 அக்டோபர், 2021

நவற்கிரி புத்தூர், நிலாவரைக் கிணற்றில்,அதிசய மர்மங்கள்

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி 
வைத்திருந்தது.
அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெற முடியவில்லை.
அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது.
ஆம்! அன்றுதான் பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நிலாவரைக் கிணற்றின்
 ஆழம் அறியப்பட்டது.
இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள்
 இறங்கினார்கள்.
கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி) சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசரியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.
கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டு சென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது.
இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என 
அனுமானிக்க முடிகிறது.
ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் 
தெரிய வந்துள்ளது.
நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணி நேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன.
ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் 
பார்க்க முடியும்.
அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத் தொடர்பு இருப்பதை 
உய்ந்தறிய முடிகிறது.
நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சியின்போதும் மழைக்காலத்தின் போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது.
இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நிலத்தடியில் காணப்படும் குகைகளுக்கான காரணமாகும். இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு
 பதிவு செய்துள்ளார
‘யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் 
வழங்கப்படுகின்றது.
சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து 
மேலுயர்த்தப்பட்டன.
இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும் போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் 
காணக்கூடியதாக உள்ளது.
இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக 
உருமாற்றம் பெற்றன.
சுண்ணப் பாறைகள் வன்னிப் பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன.
இப்பாறைப் படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.
ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக் கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது.
இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே 
காரணமாகும்.
புவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக் கற்பாறை தரையின் கீழ் நீரோடும் குகைகள் அடையானம் காணப்பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று, கடினமான அடித்தள சுண்ணக் கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத்தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.
இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய குகைகளாக உருமாறி விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன.
குகை மேலும் மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது.
இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக் கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததால் உருவாகிய குகைப் பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் 
காணப்படுகின்றன.
குரும்பசிட்டி பேய்க் கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், புலோலி 60 பாகக் கிணறு, கரவெட்டி குளக்கிணறு, ஊரணி வற்றாக்கிணறு, கீரிமலைக்கேணி, நல்லூர் யமுனா ஏரி, மானிப்பாய் இடிகுண்டு, ஊரெழுவில் பொக்கணை போன்றவையாகும்.’ 
நிலாவரைக் கிணற்றுக்குள் 18.3 மீற்றர் (60 அடி) வரையிலுமே நல்ல தண்ணீர் காணப்படுகின்றது. ஆழம் செல்லச்செல்ல நீரில் உப்புத்தன்மையின் செறிவு அதிகரித்துச் செல்வதாக ஏற்கெனவே நடத்திய பல ஆய்வுகளில் 
அறியவந்தது. 
1965 இல் நீர்வள வடிகாலமைப்பயினர், நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, 10 மணித்தியாலங்களில் 30, 000 – 40, 000 கலன் நீர் அக்கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது. இதற்கு மேலும், நீர் இறைக்கப்படின் உப்பு நீர் மேலோங்கி வருவது அவதானிக்கப்பட்டு அம்முயற்சி நிறுத்தப்பட்டது. இதற்காக, மட்டக்களப்பிலிருந்து நீராவி இயந்திரம் தருவிக்கப்பட்டே, அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் உப்பு நீரின் மேல் மிதப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. எனவே, நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும் ஆபத்துக் காணப்படுகிறது. இன்று குடாநாட்டின் பலபகுதிகளில் இந்தநிலைமை உருவாகி வருகிறது.
பெரும்பாலும் மழைக்காலங்களில், குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம், தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, கெருடாவில், கீரிமலை போன்ற 
இடங்களைக் குறிப்பிடலாம்
எனவே இவ்வாறான குகைகளின் உள்ளே அணைகளைக் கட்டி, அல்லது நன்னீர் தேக்கங்களை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் கடலினுள் செல்வதைத் தடை செய்தல் வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத்தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே பெரிதும்
 தங்கியுள்ளது.
கி. பி 1824 இல், சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி, யாழ்ப்பாண உதவிக ஆளுநராக சேர் டைக் என்பவர் நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்காக தனது சொந்தப் பணத்தைச் 
செலவு செய்து, பல வளர்ச்சித் திட்டங்களை 
நடைமுறைப்படுத்தினார்.
இவரை, மக்கள் ‘யாழ்பாண ராசா’ என செல்லமாக அழைத்தார்களாம். டைக், பதவியேற்ற 1824 இல் அந்த வருடமே நிலாவரைக் கிணற்றை மையப்படுத்திய நீர்ப்பாசனத் திட்டம் பற்றி அவர் திட்டம் வகுத்ததாக ஆங்கிலேயரின் யாழ்ப்பாண நிர்வாகக் குறிப்புகளில் காணக் 
கிடைக்கிறது.
இன்றும் நிலாவரைக் கிணற்றுக்கு மேற்குப்புறமாக உள்ள சிறுப்பிட்டி, மேற்குப்புறமாக உள்ள அச்செழு, ஈவினை கிராமங்கள் உட்பட அருகிலுள்ள நவக்கிரி, புத்தூர், கலைமதி ஆகிய கிராமங்களுக்கான விவசாய முயற்சிகளுக்கான நீர், நிலாவரைக் கிணற்றிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
1890 இல் நிலாவரையிலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பின்னர் இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் அது
 கைவிடப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஜே/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் நிலாவரைக் கிணறு அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராச வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ளது.
கிணறு அமைந்துள்ள பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்குச் சொந்தமானதாகும். இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது. இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாதராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் 
மேற்கொள்ளப்படுகிறது.
மருது, வேம்பு, வாகை போன்ற விருட்சங்கள் உயர்ந்து, வளர்ந்து சோலையாக நிழல் பரப்பி நிற்பதும் மனதுக்கு இனிமையான அமைதியான சூழலும் நிலாவரைக் கிணற்றின் அதிசயத்துக்கு அப்பால் மக்களை இந்த
 இடம் தன்பால் இழுக்கின்றது.
2009 ஆம் ஆண்டு போர் ஓய்வுக்கு முன்னர், இந்தக் கிணற்றை பாடசாலை மாணவ மாணவியர் உட்பட, ஒருசில உள்ளூர் வாசிகள் வந்து பார்த்துச் செல்வார்கள். இவர்களை விட, வழிப்போக்கர்களும் விவசாயிகளும் இந்தச் சோலையில் இளைப்பாறிச் 
செல்வார்கள்.
போர் முடிவுற்ற பின்னர், தென்பகுதி சுற்றுலாப் பயணிகளும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் குடாநாட்டுக்கு வரும்போது, சென்று பார்க்கும், இளைப்பாறும் முக்கிய சுற்றுலா இடமாக இப்போது நிலாவரை கிணற்றை அண்டிய சுற்றாடல் மாறிவிட்டது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் குடாநாட்டு பனை உட்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் குளிர்பானக் கடைகளும் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள்.
நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகின்றது. இது மிகவும் புராதனமான சிவாலயமாகும். யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் இலக்கிய நூலான தட்சண கைலாய புராணத்தில், இந்த சிவாலயம் குறித்த விவரங்கள் காணப்படுகின்றன.
தட்சண கைலாய புராணத்தில் ‘நவசைலேஸ்வரம்’ எனக் குறிப்பிடப்படும் ஆலயம் நிலாவரையில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகத்தான் இருக்க வேண்டும் என்ற தற்துணிபு பல சமய, வரலாற்று அறிஞர்களிடம் காணப்படுகின்றது.
நிலாவரை தொடர்பான கர்ண பரம்பரைக் கதையும் இராமாயணத்துடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்த போது, வானரப் படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று அந்த கர்ண 
பரம்பரைக்கதை கூறுகிறது.
எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தொட்டுணரக் கூடிய மரபுரிமைச் 
சொத்தாகும்.
அது, இன்று பெற்றிருக்கும் பிரபல்யம், சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய தனித்துவம் போன்றவை காரணமாக இந்தப் பகுதி சுற்றுலாவுக்குரிய வசதி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இங்கு வரும் மக்கள் சந்தோஷமாகத் தமது பொழுதைப் போக்கிச் செல்ல வசதிகள் செய்து 
கொடுக்கப்பட வேண்டும்.
தரமான உணவுவிடுதிகள், சிறுவர் பூங்கா, தங்கும் விடுதிகள் அத்துடன் பாதுகாப்பு போன்ற உல்லாசப் பயணிகள் எதிர்பார்க்கும் வசதி வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு திட்டங்கள் வகுத்துச் செயற்படுத்தப்படுமானால் இப்பகுதில் வேலை வாய்ப்பற்று இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிைடப்பதுடன் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடிப்படைகளும் உருவாக்கப்படுவதாக அமையும். இருக்கும் வளத்தை நிறைவாகவும் திறமையாகவும் பயன்படுத்தினால் முன்னேற்றமும் 
வளர்ச்சியும் சாத்தியமே
(இரண்டாம் இணைப்பு 23-10-2021)
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






வெள்ளி, 22 அக்டோபர், 2021

குடவத்தை பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது

யாழ் நெல்லியடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது மகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அன்றயதினம் நெல்லியடி துன்னாலை, குடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் நீண்டகாலமாக பொலிசாரிடம் சிக்காமல் நூதனமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன் வீட்டு மதிலுக்கு வெளியில் நின்று பாத்திரத்தை கொடுப்பவர்களிற்கு கசிப்பை விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
நெல்லியடி பொலிசார் சில முறை அப்பெண்ணை கைது செய்ய முயற்சி செய்த போதும் அவர் தப்பித்து வந்ததுடன், குறித்த பெண்மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று அவர் கசிப்பு விற்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசாரை கண்டதும் போத்தலில் இருந்த கசிப்பை சமையலறை நீர்தொட்டிக்குள் அவர் ஊற்ற முயன்ற நிலையில் , துரிதமாக செயற்பட்ட பொலிசார் கசிப்பை 
போத்தலை மீட்டனர்.
அதோடு அப் பெண்ணை பொலிசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, அவர் ஏற மறுத்து பெரும் இழுபறி நிலை ஏற்பட்டதுடன் , பெண்ணின் உறவினர்களும் பொலிசாரின் நடவடிக்கைக்கு இடையூறு
 ஏற்படுத்தினர்.
எனினும், பெண் பொலிசார் அவரை அள்ளிச்சென்று வாகனத்தில் ஏற்றியதையடுத்து, கைதானவரின் மகள் அயலிலுள்ள இளம் யுவதியொருவரின் வீட்டுக்கு சென்று, தம்மை காட்டிக் கொடுத்ததாக கூறி, அவரது கழுத்தை நெரித்து தாக்குதல்
 நடத்தியுள்ளார்.
அவரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,சம்பவம் தொடர்பில் 48 வயதான தாயும், 25 வயதான மகளுமே கைதான நிலையில், சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 21 அக்டோபர், 2021

திருகோணமலையில் திடீர் சோதனையில் அழகு சாதன பொருள்கள் பறிமுதல்

திருகோணமலை தலைமையக  காவல்துறை பிரிவுக்குட்பட்ட என்.சி.வீதி, மத்திய வீதி மற்றும் 3ஆம் குறுக்குத்தெரு வீதிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, பாவனைக்கு ஒவ்வாத அழகு சாதனப் பொருள்கள், கிறீம் வகைகள், சாயப்பொருள்கள், போலியாக தயாரிக்கப்பட்ட சவக்கார வகைகள் மற்றும் இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட பொருள்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக, நுகர்வோர் பாதுகாப்பு 
அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் சந்தைப் பெறுமதி சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகம் என தெரிவித்த அதிகாரிகள், அப்பொருள்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் 
தெரிவித்தனர்.
மேலும், குறிப்பிட்ட தடை விதிக்கப்பட்ட பொருள்களை சமூக வலைதளங்களில் விற்க முற்பட்ட ஒருவரையும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள்.21-10-2021. இன்று காலை  
கைதுசெய்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 19 அக்டோபர், 2021

போலி பேஸ்புக் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களில் மக்களை ஏமாற்றி மோசடி

பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயரில், போலி பேஸ்புக் கணக்குகள் உருவாக்கி தகவல் சேரிக்கும் நபர் தொடர்பில் தகவல்
 வெளியாகியுள்ளது.
தவிந்து கல்ஹார என்ற நபர் தான் புலனாய்வு பிரிவு அதிகாரி என அடையாளப்படுத்தி பல்வேறு நபர்களின் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் சேகரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
குறித்த நபர் பாணந்துர பொலிஸ் அதிகாரி சமந்த வெதகே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாமல் சீ பெரேரா, குச்சிவெளி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக வித்தானகே உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரின் பெயர்களில் பேஸ்புக் கணக்குகள் பயன்படுத்தியுள்ளதாக 
தெரியவந்துள்ளது.
பொலிஸ் ஊடக எட்மின் என தன்னை குறித்த நபர் அடையாளப்படுத்தி பல்வேறு நபர்களின் தகவல் சேகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடுகள் கிடைக்கும் நபர்களுக்கு அழைப்பேற்படுத்தி அவர்களிடம் பல்வேறு பொருட்களை பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
இந்த நபர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் 
ஆரம்பித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 18 அக்டோபர், 2021

நாட்டில் மீண்டும் பஸ் சேவைகளும் சில கட்டுப்பாடுகளுடன் செல்லத் தயார்

21 ஆம் திகதிக்குப் பிறகு மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மாகாணங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைகள் மற்றும் பணிக்காக வரும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட பின்னர் மாகாணங்களுக்கு இடையே அனுமதியின்றி பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே 21 ஆம் திகதிக்குப் பிறகு மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டாலும், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மாகாணங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) குறிப்பிடுகிறார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



Blogger இயக்குவது.